2சற்றுப் பொறும்;
காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்
நான் கூற வேண்டியவற்றை.
3தொலையிலிருந்து
என் அறிவைக் கொணர்வேன்;
எனை உண்டாக்கியவர்க்கு
நேர்மையை உரித்தாக்குவேன்.
4ஏனெனில், மெய்யாகவே
பொய்யன்று என் சொற்கள்;
அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.
5இதோ! இறைவன் வல்லவர்;
எவரையும் புறக்கணியார்;
அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.
6கொடியவரை அவர் வாழவிடார்;
ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;
7நேர்மையாளர்மீது கொண்ட
பார்வையை அகற்றார்;
அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;
என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.
8ஆனால் அவர்கள்
சங்கிலியால் கட்டுண்டாரெனில்,
வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,
9அவர்கள் செய்ததையும் மீறியதையும்,
இறுமாப்புடன் நடந்ததையும்
எடுத்து இயம்புவார்.
10அறிவுரைகளுக்கு
அவர்கள் செவியைத் திறப்பார்;
தீச்செயலிலிருந்து திரும்புமாறு
ஆணையிடுவார்.
11அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,
வளமாய்த் தங்கள் நாள்களையும்
இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.
12செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.
அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.
13தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;
அவர்களை அவர் கட்டிப்போடுகையில்
உதவிக்காகக் கதறமாட்டார்.
14அவர்கள் இளமையில் மடிவர்;
காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.
15துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;
வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.
16இடுக்கண் வாயினின்று
உங்களை இழுத்துக் காத்தார்;
ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.
உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.
17பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;
தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.
18வளமையால் வழிபிறழாமல்
பார்த்துக்கொள்ளும்;
நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.
19உம் நிறைந்த செல்வமும்
வல்லமையின் முழு ஆற்றலும்
இன்னலில் உமக்கு உதவுமா?
20இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்
இரவுக்காக ஏங்காதீர்.
21துன்பத்தைவிட தீச்செயலையே
நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே
அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
22இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;
அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?
23அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?
அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்
சொல்ல வல்லவர் யார்?
24அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.
மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.
25மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;
மனிதன் தொலையிலிருந்தே
அதை நோக்குவான்.
26இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;
நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;
அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;
கணக்கிட முடியாதவை.
27நீர்த்துளிகளை அவர்
ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை
மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.
28முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;
மாந்தர்மேல் அவற்றை
மிகுதியாகப் பெய்கின்றன.
29பரவும் முகில்களையும்
அவர்தம் மணிப்பந்தலின்
ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?
30இதோ! தம்மைச் சுற்றி
மின்னல் ஒளிரச் செய்கின்றார்.
கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.
31இவற்றால், மக்களினங்கள்மீது
தீர்ப்பளிக்கின்றார்;
அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.
32மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;
இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.
33இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;
புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.