நீதிக்கு விதிவிலக்கு இல்லை

1அதற்கு நாமாயனான சோப்பார்

கூறின பதில்:

2என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,

என் எண்ணங்கள்

பதில் சொல்ல வைக்கின்றன.

3என்னை வெட்கமடையச் செய்யும்

குத்தல்மொழி கேட்டேன்;

நான் புரிந்து கொண்டதிலிருந்து

விடை அளிக்க

மனம் என்னை உந்துகிறது.

4மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,

தொன்றுதொட்டு நடக்குமிது

உமக்குத் தெரியாதா?

5கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!

கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு

கணப்பொழுதே!

6அவர்களின் பெருமை

விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,

அவர்களின் தலை

முகிலை முட்டுமளவு இருந்தாலும்,

7அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று

என்றைக்கும் ஒழிந்திடுவர்;

அவர்களைக் கண்டவர்,

எங்கே அவர்கள்? என்பர்.

8கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;

இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.

9பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;

வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

10ஏழைகளின் தயவை

அவர்களின் குழந்தைகள் நாடுவர்;

அவர்களின் கைகளே

அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.

11எலும்புகளை நிரப்பிய

அவர்களின் இளமைத் துடிப்பு,

மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.

12தீங்கு அவர்களின் வாயில்

இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில்

அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,

13இழந்து போகாமல்

அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,

அண்ணத்தின் நடுவே

அதை அடைத்து வைத்தாலும்,

14வயிற்றிலே அவர்களின் உணவு

மாற்றமடைந்து, அவர்களுக்கு

விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;

15செல்வத்தை விழுங்கினர்;

அதை அவர்களே கக்குவர்;

இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து

அதை வெளியேற்றுவார்.

16விரியன் பாம்பின் நஞ்சை

அவர்கள் உறிஞ்சுவர்;

கட்டு விரியனின் நாக்கு

அவர்களைக் கொன்றுபோடும்.

17ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்

, தேன், வெண்ணெய் ஆறுகளிலும்

அவர்கள் இன்பம் காணார்.

18தங்களின் உழைப்பின் பயனை

அவர்கள் திரும்ப அளிப்பர்;

அதை அவர்கள் உண்ணமாட்டார்;

வணிகத்தின் வருவாயில் இன்புறார்.

19ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி,

இல்லாதவராக்கினர்;

தாங்கள் கட்டாத வீட்டை

அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.

20அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;

ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில்

மிச்சத்தைக் காணார்.

21அவர்கள் தின்றபின்

எஞ்சியது எதுவும் இல்லை; எனவே

அவர்களது செழுமை நின்று நிலைக்காது.

22நிறைந்த செல்வத்திடை

அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;

அவலத்தின் பளுவெல்லாம்

அவர்கள்மேல் விழும்.

23அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,

இறைவன் தம் கோபக்கனலை

அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே

அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

24அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு

அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில்

அவர்களை வீழ்த்திடுமே!

25அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;

மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்;

அச்சம் அவர்கள் மேல் விழும்.

26காரிருள் அவர்களது கருவூலத்திற்குக்

காத்திருக்கும்; மூட்டாத தீ

அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின்

கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.

27விண்ணகம் அவர்களின் பழியை

வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை

மறுத்திட எழுந்து நிற்கும்.

28அவர்களது இல்லத்தின் செல்வம்

சூறையாடப்படும்; இறைவனின்

வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.

29இதுவே பொல்லார்க்குக்

கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு

இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.