நெகேமியா முன்னுரை


‘நெகேமியா’ என்னும் இந்நூல், ‘எஸ்ரா’ நூலைப் போன்று ‘குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். நெகேமியா, பாரசீகத் தலைநகரான சூசாவில் மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்களின் இழிநிலையைக் கண்டு வருத்தமுற்றார். பாரசீக மன்னரால் யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார். பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளுக்கிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். சமய, சமூகச் சீர்திருத்தங்களை இஸ்ரயேல் மக்களிடையே செய்தார்.

இவரது காலத்தில் சட்டவல்லுநரான எஸ்ரா திருச்சட்டத்தை மக்கள் முன் வாசிக்க, மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடன்படிக்கையின்படி வாழ உறுதி பூண்டனர். இறைவனின் உதவியின்றித் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நெகேமியா உணர்ந்திருந்தார். எனவே, அவர் பலமுறை இறைவனிடம் மன்றாடினார். அவர் உள்ளத்தினின்று எழுந்த மன்றாட்டுகள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நூலின் பிரிவுகள்

  1. நெகேமியா எருசலேமுக்கு வருதல் 1:1 - 2:20
  2. எருசலேம் நகரின் மதில்கள் திரும்பக் கட்டப்படுதல் 3:1 - 7:73
  3. திருச்சட்டம் வாசிக்கப்பட்டு உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல் 8:1 - 10:39
  4. நெகேமியாவின் பிற செயற்பாடுகள் 11:1 - 13:31