யூதாவின் அரசர் யோசியா
(2 அர 22:1-2)

1யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2அவர் ஆண்டவர் திருமுன் நேரியன செய்து, தம் மூதாதை தாவீதின் வழியிலேயே நின்று, நெறிமுறை வழுவாது ஒழுகினார்.

யோசியாவின் சீர்திருத்தங்கள்

3அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவர் இன்னும் இளைஞராக இருந்தபோது, அவர் மூதாதை தாவீதின் கடவுளை நாடிச்செல்லலானார்; தமது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், தொழுகை மேடுகள், அசேராக் கம்பங்கள், செதுக்கப்பட்ட சிலைகள், வார்க்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை அகற்றி, யூதாவையும் எருசலேமையும் தூய்மையாக்கத் தொடங்கினார்.
4அவர் தம் மேற்பார்வையில் பாகாலின் பலிபீடங்களை உடைத்தெறிந்தனர்; அதற்கு மேலிருந்த சிலைகளை அவர் உடைத்தார். மேலும், அசேராக் கம்பங்களையும், செதுக்கப்பட்டனவும் வார்க்கப்பட்டனவுமாகிய சிலைகளையும் தூள்தூளாக்கி, அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளிலேயே வீசியெறிந்தார்.
5அவர் அர்ச்சகர்களின் எலும்புகளை அவர்களின் பலிபீடங்களிலேயே சுட்டெரித்து, யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினார்.
6மேலும், மனாசே, எப்ராயிம், சிமியோன், நப்தலி வரையிலுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தார்.
7பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் உடைத்தெறிந்தார்; செதுக்கப்பட்ட சிலைகளைத் தூள்தூளாக்கினார். இஸ்ரயேல் நாட்டிலிருந்த எல்லாத் தூபப் பீடங்களையும் நொறுக்கியபின், அவர் எருசலேமுக்குத் திரும்பினார்.

சட்ட நூல் கண்டுபிடிக்கப்படல்
(2 அர 22:3-20)

8இவ்வாறு, நாட்டைத் தூய்மையாக்கிய அவர்தம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அவர்தம் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைச் செப்பனிட அட்லியா மகன் சாப்பான், நகரின் ஆளுநர் மாசேயா, பதிவாளர் யோவாகு ஆகியோரை அனுப்பினார்.
9மனாசே, எப்ராயிம், எஞ்சியிருந்த இஸ்ரயேல் ஆகியோரிடமும் மற்றும் யூதா, பென்யமின், எருசலேம் வாழ் மக்கள் அனைவரிடமிருந்தும் வாயிற் காவலராகிய லேவியர் சேகரித்த பணத்தை அவர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்தனர்; அவற்றைத் தலைமைக் குரு இல்க்கியாவிடம் ஒப்படைத்தனர்.
10அவர்கள் அதை ஆண்டவரின் இல்ல மேற்பார்வையாளரிடம் அளித்தனர். அவர்களோ அதை பணிசெய்வோரிடம் கோவிலைச் செப்பனிட்டுச் செம்மைப்படுத்துமாறு கொடுத்தனர்.
11அவர்களே தச்சருக்கும் கொத்தருக்கும் பணம் கொடுத்தனர்; யூதாவின் அரசர்கள் அழித்து விட்ட வீடுகளுக்காக வாங்கப்பட்ட செங்கற்கள், இணைப்பு மரங்கள் ஆகியவற்றுக்காகவும் பணம் கொடுத்தனர்.
12வேலையாள்கள் நேர்மையோடு வேலை செய்தனர்; இப்பணியை மேற்பார்வை செய்ய மெராரியின் புதல்வர்களான யாகத்து, ஒபதியா என்ற லேவியரும், கோகாத்தியரான செக்கரியாவும் மெசுல்லாமும் நியமிக்கப்பட்டிருந்தனர். இசைக்கருவிகளை மீட்டுவதில் திறமைமிக்க லேவியர் எல்லாரும்,
13கூலியாள்களுக்குப் பொறுப்பாளராகவும், தனித்தனிப் பணி செய்யவும் அனைவருக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தனர்; லேவியர் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற்காப்பாளருமாகவும் இருந்தனர்.
14ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை வெளியே எடுத்தபோது, மோசே வழியாக அளிக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்டநூலை குரு இல்க்கியா கண்டு பிடித்தார்.
15அப்பொழுது இல்க்கியா எழுத்தராகிய சாப்பானைப் பார்த்து, “இதோ, நான் ஆண்டவரின் இல்லத்தில் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று கூறி அவர் அந்த நூலைச் சாப்பானிடம் ஒப்படைத்தார்.
16சாப்பான் அந்நூலை அரசரிடம் கொண்டுவந்து, அவரை நோக்கி, “உம் அலுவலர்களுக்கு நீர் கட்டளையிட்டவை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள்;
17ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர்” என்றார்.
18எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து, “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார்” என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.
19அரசர் திருச்சட்ட நூலைப் படிக்கக் கேட்டபோது தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்.
20பின்னர், இல்க்கியா, சாப்பான் மகன் அகீக்காம், மீக்காவின் மகன் அப்தோன், எழுத்தர் சாப்பான், அரச அலுவலர் அசாயா ஆகியோரைப் பார்த்து அரசர்,
21“கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில், இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம் கொண்டுள்ளார்” என்று கூறினார்.
22இல்க்கியாவும், அரசரைச் சார்ந்த மற்றவர்களும், அசுராவின் பேரனும் தோக்காத்தின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்றனர்; எருசலேமின் இரண்டாம் தொகுதியில் குடியிருந்த அவரிடம் இதுபற்றிப் பேசினர்.
23அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்;
24ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தின்மீதும், இதில் வாழ்வோர்மீதும் தீங்குகளை யூதாவின் அரசர் முன் படிக்கப்பட்ட நூலின் வார்த்தைகளில் கண்ட அனைத்துச் சாபங்களையும் வரச் செய்வேன்.
25ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினர்; வேற்றுத் தெய்வங்களுக்குக் தூபம் காட்டினர். எனவே, இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.
26ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
27இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிரான அவர்தம் வார்த்தைகளை நீ கேட்டு, மனம்நைந்து, கடவுளுக்குமுன் உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்; தாழ்ந்து நின்ற நீ உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவிகொடுத்துள்ளேன்.
28ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்; நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய்” என்றாள். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.

திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட யோசியாவின் உடன்படிக்கை
(2 அர 23:1-20)

29யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார்.
30பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார்.
31பின்பு, அரசர் தம் இடத்தில் நின்றுகொண்டு, ஆண்டவரின் கட்டளையையும் சான்றுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார்.
32அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்; எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர்.
33பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்; இஸ்ரயேலில் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகியஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை.

34:1 எரே 3:6. 34:4 2 அர 21:3; 2 குறி 33:3. 34:5 1 அர 13:2.