யோசபாத்தைத் திருக்காட்சியாளர் இடித்துரைத்தல்

1யூதாவின் அரசராகிய யோசபாத்து எருசலேமிலிருந்த தம் அரண்மனைக்கு நலமாய்த் திரும்பி வந்தார்.
2அப்போது அனானீயின் மகன் ஏகூ என்ற திருக்காட்சியாளர் அரசர் யோசபாத்தைச் சந்தித்து அவரிடம், “நீர் தீயவனுக்குத் துணை நிற்கலாமா? ஆண்டவரை வெறுப்பவனோடு நட்புக் கொள்ளலாமா? அதனால் ஆண்டவரின் சினம் உம்மேல் விழ இருந்தது.
3ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்; அதாவது அசேராக் கம்பங்களை நாட்டிலிருந்து எரித்து அகற்றினீர்; கடவுளை நாடுவதில் உம் இதயம் நிலையாயிருந்தது” என்று கூறினார்.

யோசபாத்தின் சீர்திருத்தங்கள்

4எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து தம் குடிமக்களைக் காணப்புறப்பட்டுச் பெயேர்செபா முதல், மலைநாடான எப்ராயிம் வரைசென்று, அவர்களைத் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்.
5மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் நீதிபதிகளை அவர் நியமித்தார்.
6அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் செய்வது யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் நீதி வழங்குவது மனிதனை முன்னிட்டு அன்று, ஆண்டவரை முன்னிட்டே; ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார்.
7உங்களிடம் இறையச்சம் இருக்கட்டும்; எல்லாவற்றையும் கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதி இல்லை; ஓர வஞ்சனை இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது” என்றார்.
8மேலும், ஆண்டவருக்கடுத்த காரியங்களில் நீதி வழங்கவும், மற்ற வழக்குகளைத் தீர்க்கவும் யோசபாத்து சில லேவியரையும் குருக்களையும் இஸ்ரயேல் குடும்பத்தலைவர்களையும் எருசலேமில் ஏற்படுத்தினார். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
9அவர் அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள்.
10அவரவர்தம் நகர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர், இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், நியமங்கள் ஆகியவற்றை அடுத்த வழக்குகளை உங்களிடம் தீர்ப்புக்குக் கொண்டு வரும்போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சினம் உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் விழாதபடியும் அவர்களை எச்சரியுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்.
11ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாவும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியத்திலும் இஸ்மவேலின் மகனும் யூதா மரபின் ஆளுநனுமான செபதியாவும் தலைமை வகிப்பார்கள். லேவியர் உங்கள் அலுவலராய் இருப்பர். மன உறுதியுடன் செயல்படுங்கள்; நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்.”