யூதா அரசன் அமட்சியா
(2 குறி 25:1-24)

1இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதா அரசன் யோவாசின் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
2அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த யோவதீன் என்பவளே அவன் தாய்.
3அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும், தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.
4தொழுகை மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம்காட்டியும் வந்தனர்.
5ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.
6ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில், ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது; பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர்.
7அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் ‘யோக்தவேல்’ என்ற பெயரை இட்டான்.
8பின்பு, அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் தூதனுப்பி, “வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்” என்று சொல்லச் சொன்னான்.
9அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, “லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ‘என் மகனுக்கு உன் மகளை மணமுடித்துக் கொடு’ என்றதாம்; ஆனால், லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்!
10நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே, நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால், உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்?” என்று சொன்னான்.
11அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
12யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
13இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளினான்.
14ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.
15யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளது அல்லவா?
16யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.

யூதா அரசன் அமட்சியாவின் இறப்பு
(2 குறி 25:25-28)

17இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
18அமட்சியாவின் பிற செயல்கள் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
19எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே, அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால், அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து,
20அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
21பின்னர், யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.

இஸ்ரயேல் அரசன் இரண்டாம் எரொபவாம்

23யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தோராண்டுகள் ஆட்சி செய்தான்.
24அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அகலவில்லை.
25இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
26ஏனெனில், இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ, எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்.
27ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே, அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார்.
28எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை — ஆகியன பற்றி ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
29எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.

14:6 இச 24:16. 14:25 யோனா 1:1.
14:21 ‘உசியா’ என்பது மறுபெயர்.