சாலமோனின் அரண்மனை

1சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின.
2அவர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் கட்டினார்.
3வரிசைக்குப் பதினைந்தாக நின்ற நாற்பத்தைந்து தூண்களின்மேல் அமைந்திருந்த அறைகள், கேதுரு மரங்களாலேயே மச்சுப் பாவபட்டிருந்தன. பலகணிகள் மூன்று வரிசையாக அமைந்திருந்தன.
4மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.
5எல்லாக் கதவுகளும் கதவு நிலைகளும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.
6அவர் ‘தூண்-மண்டபம்’ ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஐம்பது முழம்; அகலம் முப்பது முழம். அதற்கு முன் தூண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.
7நீதி வழங்குவதற்கென்று அரியணை மண்டபம் ஒன்றையும் கட்டினார். அது ‘நீதி மண்டபம்’எனப்படும். அது தளம் முழுவதும் கேதுருப் பலகைகளால் பாவப்பெற்றிருந்தது.
8இம்மண்டபத்திற்குப் பின்புறம் இருந்த முற்றத்தில், அவர் குடியிருப்பதற்காகக் கட்டிய அரண்மனையும் அதே வேலைப்பாடு கொண்டதாய் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பார்வோனின் மகளுக்கென்று அம்மண்டபத்தைப் போன்ற ஒரு மாளிகையையும் கட்டினார்.
9இவையனைத்தும், அளவுக்கேற்ப இருபுறமும் வெட்டிச் செதுக்கிய விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. அடித்தளம் முதல் கூரை வரை, வெளிச்சுற்று முதல் பெரு முற்றம் வரை, இவ்வாறே செய்யப்பட்டன.
10அடித்தளம் பத்து, எட்டு முழ அரிய பெரிய கற்களால் ஆனது.
11அதன் மேல் அளவுக்கேற்பச் செதுக்கப் பெற்ற தரமான கற்களும் கேதுருப் பலகைகளும் பொருத்தப் பெற்றிருந்தன.
12பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப்பெற்றிருந்தன.

சிறப்புச் சிற்பி ஈராம்

13அரசர் சாலமோன் தீரிலிருந்து ஈராமை வரவழைத்திருந்தார்.
14இவர் நப்தலி குலத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணின் மகன். இவர் தந்தை தீர்நகரத்தவர்; வெண்கல வேலையில் கை தேர்ந்தவர். ஈராமும் எல்லா வகையான வெண்கல வேலையும் செய்யத்தக்க அறிவுக்கூர்மையும் நுண்ணறிவும் கைத்திறனும் கொண்டிருந்தார். இவர் அரசர் சாலமோனிடம் வந்து அவர் இட்ட வேலையை எல்லாம் செய்தார்.

இரு வெண்கலத்தூண்கள்
(2 குறி 3:15-17)

15அவர் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை.
16அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம்.
17அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார்.
18மேலும், அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார்.
19முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம்.
20மேலும், தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன.
21இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு ‘யாக்கின்’ என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் ‘போவாசு’ என்றும் பெயரிட்டார்.
22தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு, தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.

வார்ப்புக் கடல்
(2 குறி 4:2-5)

23அவர் ‘வார்ப்புக்கடல்’ அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.
24அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன.
25அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன.
26வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

வெண்கலத் தள்ளுவண்டிகள்

27மேலும், அவர் பத்து வெண்கலத் தள்ளுவண்டிகளைச் செய்தார். ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது.
28வண்டிகளின் அமைப்பு பின்வருமாறு; அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன.
29சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.
30ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன.
31அதன் வாய்ப்பகுதி ஒரு வளையத்தினுள் ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது வட்டமாகவும், ஒன்றரை முழ ஆழம் உடையதாகவும் ஒரு தாங்கியைப் போல் செய்யப்பட்டிருந்தது. வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. அதன் குறுக்குக் கம்பிகள் வட்டமாக இல்லாமல், சதுரமாக அமைக்கப்பட்டிருந்தன.
32நான்கு சக்கரங்களும் குறுக்குக் கம்பிகளின் கீழே இருந்தன. சக்கரங்களின் அச்சுகள், வண்டியுடன் ஒரே வார்ப்பாய் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம்.
33சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் அச்சுகள், வட்டைகள், ஆரக்கால்கள், குடங்கள் ஆகியவை வார்ப்பால் ஆனவை.
34வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பிடிகள் இருந்தன.
35அவையும் வண்டியும் ஒரே வார்ப்பாய் இருந்தன. ஒவ்வொரு வண்டியின் மேற்பகுதியிலும் அரை முழ உயரமான வட்ட விளிம்பு இருந்தது. வண்டியின் மேற்பகுதியில் அதன் பிடிகளும் குறுக்குக் கம்பிகளும் ஒரே வார்ப்பாய் இருந்தன.
36அதன் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவற்றை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு அவர் செதுக்கினார். இவ்வாறு, பத்து வண்டிகள் செய்தார்.
37இதே முறையில் பத்து வண்டிகளையும் அவர் செய்தார்; அவை யாவும் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே வடிவமும் கொண்டனவாய் இருந்தன.
38அவர் பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்தார். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம், வண்டிக்கு ஒரு தொட்டியாக பத்து வண்டிகளிலும் தொட்டிகள் இருந்தன.
39அவர் ஐந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால், வார்ப்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.

திருக்கோவிலுக்கான பொருள்களின் பட்டியல்
(2 குறி 4:11-5:1)

40பின்னர், கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை ஈராம் செய்தார். ஆண்டவரின் இல்லத்திற்காக அரசர் சாலமோன் பணித்தபடி ஈராம் செய்து முடித்த அனைத்துப் பணிகள்:
41இரு தூண்கள், தூண்களின் உச்சியில் வைக்க இரு கிண்ணப் போதிகைகள்; அவற்றை மூட இரு வலைப் பின்னல்கள்;
42நானூறு மாதுளம் பழ வடிவங்கள். இவை ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் இரு வரிசைகளாக அமைக்கபட்டுத் தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணப் போதிகைகளை மூடியிருந்தன.
43பத்து வண்டிகள், அவற்றின் மேல் வைக்கப் பத்துப் தொட்டிகள்.
44‘சவார்ப்புக் கடல்’ ஒன்று; அதைத் தாங்கப் பன்னிரு காளை வடிவங்கள்.
45கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள். அரசர் சாலமோன் கட்டளைப்படி ஆண்டவரின் இல்லத்திற்காக ஈராம் செய்த துணைக் கலன்கள் எல்லாம் பளபளக்கும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.
46அரசர் இவற்றை யோர்தானுக்கடுத்த சமவெளியில் சுக்கோத்துக்கும் சாரத்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் களத்தில் வார்ப்பித்தார்.
47இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.
48மேலும், சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகப் பின்வரும் பொருள்கள் அனைத்தையும் செய்தார்; பொன் பலிபீடம், திருமுன்னிலை அப்பத்திற்கான பொன் மேசை;
49கருவறையின் முன்னே, தென்புறம் ஐந்தும் வடபுறம் ஐந்துமாக வைக்க, பசும்பொன் விளக்குத் தண்டுகள்; பொன்னாலான மலர் வடிவங்கள், அகல்கள், குறடுகள்;
50பசும் பொன்னாலான மலர்க் குவளைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள், தட்டுகள், தீச்சட்டிகள்; உட்கோவிலின் திருத்தூயகத்தின் கதவுகளுக்கும் கோவிலின் தூயகத்தின் கதவுகளுக்கும் வேண்டிய பொன் முளைகள்.
51இவ்வாறு, அரசர் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகச் செய்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. மேலும், சாலமோன் தம் தந்தை தாவீது அர்ப்பணித்திருந்த வெள்ளி, பொன், துணைக்கலன்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆண்டவரின் இல்லத்துக் கருவூலத்தில் வைத்தார்.

7:8 1 அர 3:1. 7:38 விப 30:17-21. 7:48 விப 25:23-30; 30:1-3. 7:49 விப 25:31-40. 7:51 2 சாமு 8:11; 1 குறி 18:11.