தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)

1ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:

2“ஆண்டவர் என் காற்பாறை;

என் கோட்டை; என் மீட்பர்;

3என் கடவுள்; நான் புகலிடம்

தேடும் மலை அவரே; என் கேடயம்;

எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;

என் அரண்; என் தஞ்சம்;

என் மீட்பர். கொடுமையினின்று

என்னை விடுவிப்பவரும் அவரே.

4போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி

நான் மன்றாடினேன்.

என் எதிரிகளிடமிருந்து நான்

மீட்கப்பட்டேன்.

5ஏனெனில், சாவின் அலைகள்

என்னைச் சூழ்ந்து கொண்டன;

அழிவின் சுழல்கள் என்னை

மூழ்கடித்தன.

6பாதாளக் கயிறுகள் எனனைச்

சுற்றி இறுக்கின;

சாவின் கண்ணிகள் என்னைச்

சிக்க வைத்தன.

7என் நெருக்கடி வேளையில் நான்

ஆண்டவரிடம் மன்றாடினேன்;

என் கடவுளை நோக்கிக் கதறினேன்;

தமது கோவிலினின்று அவர்

என்குரலைக் கேட்டார்; என் கதறல்

அவர் செவிகளுக்கு எட்டியது.

8அப்பொழுது, மண்ணுலகம்

அசைந்து அதிர்ந்தது;

வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்

கிடுகிடுத்தன;

அவர்தம் கடுஞ்சினத்தால்

அவை நடுநடுங்கின.

9அவரது நாசியினின்று புகை

கிளம்பிற்று;

அவரது வாயினின்று எரித்தழிக்கும்

தீ மூண்டது;

அவரிடமிருந்து நெருப்புக் கனல்

வெளிப்பட்டது.

10வானைத் தாழ்த்தி அவர்

கீழிறங்கினார்;

கார் முகில் அவரது காலடியில்

இருந்தது.

11கெருபுமீது அவர் ஏறிப்

பறந்து வந்தார்;

காற்றை இறக்கைகளாகக்

கொண்டு விரைந்து வந்தார்.

12காரிருளை அவர் மூடுதிரை

ஆக்கிக் கொண்டார்;

நீர் கொண்ட முகிலைக்

கூடாரமாக்கிக் கொண்டார்.

13அவர் தம் திருமுன்னின் பேரொளியி

னின்று நெருப்புக் கனல் தெறித்தது.

14ஆண்டவர் வானங்களில் இடியென

முழங்கினார்; உன்னதர் தம் குரலை

அதிரச் செய்தார்.

15தம் அம்புகளை எய்து அவர்

அவர்களைச் சிதறடித்தார்;

மின்னல்களால் அவர்களைக்

கலங்கடித்தார்.

16ஆண்டவரின் கடிந்துரையாலும்

அவரது மூச்சுக் காற்றின்

வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு

தென்பட்டது; நிலவுலகின்

அடித்தளம் காணப்பட்டது.

17உயரத்தினின்று அவர் என்னை

எட்டிப் பிடித்துக் கொண்டார்;

வெள்ளப் பெருக்கினின்று

என்னைக் காப்பாற்றினார்.

18என் வலிமைமிகு எதிரியிடமிருந்து

அவர் என்னை விடுவித்தார்.

என்னைவிட வலிமைமிகு

பகைவரிடமிருந்து என்னைப்

பாதுகாத்தார்.

19எனக்கு இடுக்கண் வந்த நாளில்

அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;

ஆண்டவரோ எனக்கு ஊன்று

கோலாய் இருந்தார்.

20நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்

என்னைக் கொணர்ந்தார்;

நான் அவர் மனத்திற்கு

உகந்தவனாய் இருந்ததால்

அவர் என்னை விடுவித்தார்.

21ஆண்டவர் எனது நேர்மைக்கு

உரிய பயனை எனக்களித்தார்;

என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்

கைம்மாறு செய்தார்.

22ஏனெனில், நான் ஆண்டவர்

காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;

பொல்லாங்குசெய்து என் கடவுளை

விட்டு அகலவில்லை.

23அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்

என் கண்முன் வைத்திருந்தேன்;

அவர்தம் விதிமுறைகளை

நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

24அவர் முன்னிலையில் நான்

மாசற்றவனாய் இருந்தேன்;

தீங்கு செய்யா வண்ணம் என்னைக்

காத்துக் கொண்டேன்.

25ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய

பயனை அளித்தார்;

அவர்தம் பார்வையில் நான்

குற்றமற்றவனாய் இருந்தேன்.

26மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்

மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்

நீர் விளங்குகின்றீர்!

27தூயோர்க்குத் தூயவராகவும்

வஞ்சகர்க்கு விவேகியாகவும்

உம்மை நீர் காட்டுகின்றீர்.

28எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;

செருக்குற்றோரை ஏளனத்துடன்

நீர் பார்க்கின்றீர்.

29ஆண்டவரே! நீரே என்

ஒளி விளக்கு!

ஆண்டவர் என் இருளை

ஒளிமயமாக்குகின்றார்.

30உம் துணையுடன் நான்

எப்படையையும் நசுக்குவேன்;

என் கடவுளின் துணையால்

எம்மதிலையும் தாண்டுவேன்.

31இந்த இறைவனின் வழி

நிறைவானது; ஆண்டவரின் வாக்கு

நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்

புகும் அனைவர்க்கும் அவரே

கேடயமாய் இருக்கின்றார்.

32ஏனெனில், ஆண்டவரைத் தவிர

வேறு இறைவன் யார்?

நம் கடவுளைத் தவிர நமக்கு

வேறு கற்பாறை ஏது?

33இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு

கோட்டையாய் உள்ளார்;

என் வழியை பாதுகாப்பானதாய்ச்

செய்தவரும் அவரே.

34அவர் என் கால்களை மான்களின்

கால்களைப்போல் ஆக்குகின்றார்;

உயர்ந்த இடத்தில் என்னை

நிலை நிறுத்துகின்றார்.

35போருக்கு என்னை அவர்

பழக்குகின்றார்; எனவே, வெண்கல

வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!

36பாதுகாக்கும் உம் கேடயத்தை

நீர் எனக்கு வழங்கினீர்;

உமது துணையால் என்னைப்

பெருமைப்படுத்தினீர்.

37நான் நடக்கும் வழியை

அகலமாக்கினீர்;

என் கால்கள் தடுமாறவில்லை.

38என் எதிரிகளைத் துரத்திச் சென்று

அழித்தேன்; அவர்களை

அழித்தொழிக்கும் வரை

நான் திரும்பவில்லை.

39நான் அவர்களைக் கொன்று

அழித்தேன்; அவர்கள்

எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்

காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.

40போரிடும் ஆற்றலை எனக்கு

அரைக் கச்சையாக அளித்தீர்;

என்னை எதிர்த்தவர்களை எனக்கு

அடிப்பணியச் செய்தீர்.

41என் எதிரிகளைப் புறமுதுகிடச்

செய்தீர்: என்னை வெறுத்தோரை

நான் அழித்துவிட்டேன்.

42உதவி வேண்டி அவர்கள்

கதறினார்கள்;

ஆனால், அவர்களுக்கு உதவுவார்

யாருமில்லை;

அவர்கள் ஆண்டவரை நோக்கி

மன்றாடினார்கள்;

ஆனால், அவர்களுக்கு அவர்

பதிலளிக்கவில்லை.

43எனவே, நான் அவர்களை மண்ணின்

புழுதியென நசுக்கினேன்;

அவர்களைத் தெருச் சேறென

மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.

44என் மக்களின் கலகத்தினின்று

என்னை விடுவித்தீர்;

பிற இனங்களுக்கு என்னைத்

தலைவனாக்கினீர்;

முன்பின் அறியாத மக்களும் எனக்குப்

பணிவிடை செய்தனர்.

45வேற்று நாட்டவர் என்னிடம்

கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்

என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்

எனக்குக் கீழ்ப்படிந்தனர்.

46வேற்று நாட்டவர் உள்ளம்

தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து

நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.

47ஆண்டவர் உண்மையாகவே

வாழ்கின்றார்; என் கற்பாறையாம்

அவர் போற்றப் பெறுவாராக!

என் மீட்பின் கற்பாறையாம்

கடவுள் மாட்சியுறுவாராக!

48எனக்காகப் பழிவாங்கும் இறைவன்

அவர்; மக்களினங்களை எனக்குக்

கீழ்ப்படுத்தியவரும் அவரே!

49என் பகைவரிடமிருந்து என்னை

அழைத்துவந்தவர் அவரே!

என் எதிரிகளுக்கு மேலாக என்னை

உயர்த்தினீர்! என்னைக்

கொடுமைப்படுத்தியவரிடமிருந்து

நீர் என்னைக் காத்தீர்!

50ஆகவே, ஆண்டவரே!

பிற இனத்தாரிடையே உம்மைப்

போற்றுவேன்; உம் பெயருக்குப்

புகழ் மாலை சாற்றுவேன்.

51தாம் ஏற்படுத்திய அரசருக்கு

மாபெரும் வெற்றியை அவளிப்பவர்

அவர்! தாம் திருப்பொழிவுசெய்த

தாவீதுக்கும் அவர்தம்

மரபினருக்கும் என்றென்றும்

பேரன்பு காட்டுபவரும் அவரே!”


22:34 அப 3:19. 22:50 உரோ 15:9.
22:46 ‘போர்க்கோலம் பூண்டு’ என்பது எபிரேய பாடம்.