யாக்கோபு லாபானிடமிருந்து தப்பியோடல்

1லாபானின் புதல்வர், “நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.
2லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.
3ஆண்டவர் யாக்கோபை நோக்கி, “உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.
4எனவே, யாக்கோபு ராகேலையும் லேயாவையும் தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.
5பிறகு அவர் அவர்களை நோக்கி, “உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.
6உங்கள் தந்தைக்காக முழு வலிமையுடன் உழைத்தேன் என்று உங்களுக்குத் தெரியும்.
7உங்கள் தந்தையோ என்னை ஏமாற்றி, என் கூலியைப் பத்து முறை மாற்றினார். அவர் வழியாக எனக்கு எவ்விதத்தீங்கும் நேரிடக் கடவுள் விடவில்லை
8ஏனெனில், ‘கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம்’ என்றபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன. ‘வரியுள்ளவை உனக்குரிய ஊதியம்’ என்றபோதோ ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.
9இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.
10ஆடுகள் சினையுறும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளியும் உடையனவாய் இருந்தன.
11அக்கனவில் கடவுளுடைய தூதர், ‘யாக்கோபு!’ என்று என்னை அழைக்க, நான், ‘இதோ! அடியேன்’ என்றேன்.
12அவர், ‘உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும் வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார். ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.
13நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே. நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்’ என்று கூறினார்'’ என்றார்.
14அதற்கு ராகேலும், லேயாவும், “எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?
15அவர் எங்களை அந்நியப் பெண்களைப் போல் விலைக்கு விற்று, எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?
16ஆனால், செல்வத்தையெல்லாம் எங்கள் தந்தையிடமிருந்து கடவுள் பிடுங்கி, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரிமையாக்கினார். ஆகையால், கடவுள் உங்களுக்குச் சொன்னதையெல்லாம் செய்யுங்கள்” என்றனர்.
17அப்போது யாக்கோபு, தம் மக்களையும், மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
18பதான் அராமில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு, மந்தைகள் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டு, கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கிப் பயணமானார்.
19லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.
20மேலும், யாக்கோபு, தாம் ஓடிப்போகிற செய்தியை அரமேயனான லாபானுக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்.
21அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நதியைக் கடந்து கிலயாது மலைநாட்டை நோக்கித் தப்பியோடினார்.

லாபான் யாக்கோபைத் துரத்திப் பிடித்தல்

22யாக்கோபு தப்பியோடிய செய்தி லாபானுக்கு மூன்றாம் நாள் தெரிவிக்கப்பட்டது.
23உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.
24அன்றிரவு கனவில் அரமேயனான லாபானுக்குக் கடவுள் தோன்றி அவனை நோக்கி, “நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்” என எச்சரித்தார்.
25லாபான் யாக்கோபை நெருங்கியபொழுது, யாக்கோபு கிலயாது மலைப்பகுதியில் கூடாரம் அடித்திருந்தார். அம்மலைப் பகுதியில் லாபானும் அவன் உறவினரும் கூடாரமடித்துத் தங்கினர்.
26அவன் யாக்கோபை நோக்கி: “நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?
27எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு, ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? நான் மேளதாள வாத்தியங்களுடன் மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!
28என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்? நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டீர்.
29இப்போதோ, உமக்குத் தீங்கிழைக்க என்னால் முடியும். ஆனால், நேற்றிரவு உம் தந்தையின் கடவுள் என்னை நோக்கி, “நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம்” என்று எச்சரித்தார்.
30உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால், என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?” என்றான்.
31யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, “நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.
32ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால், அவன் உயிரோடு இருக்க வேண்டாம். உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்” என்றார். அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
33அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாவின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து, ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.
34இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டார். லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.
35அவர் தன் தந்தையை நோக்கி, “என் தலைவராகிய உம் முன்னிலையில் என்னால் நிற்க முடியவில்லை என்று சினம்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் மாதவிலக்காய் இருக்கிறேன்” என்றார். எனவே, அவன் எவ்வளவு தேடிப்பார்த்தும் குலதெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36அப்பொழுது யாக்கோபு சினமுற்று லாபானுடன் வாதிட்டு மறுமொழியாகக் கூறியது: “நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?
37என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா? அப்படியானால், அதை என் உறவினர், உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும். இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்
38இதற்காகத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே! உம்முடைய மந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!
39கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன். ஆனால், இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!
40பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின. அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.
41இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப் பதினான்கு ஆண்டுகளும் உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன். நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.
42ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின் கடவுள் என்னோடு இருந்திராவிடில் உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர். ஆனால், கடவுள் என் துன்பத்தையும் கடின உழைப்பையும் கண்டு நேற்றிரவு உம்மை எச்சரித்திருக்கிறார்” என்றார்.

யாக்கோபு-லாபான் உடன்படிக்கை

43அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, “இப்புதல்வியர் என் புதல்வியர்; இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?
44வாரும்; நானும் நீரும் இப்பொழுது உடன்படிக்கை செய்துகொள்வோம். அது உமக்கும் எனக்குமிடையே சான்றாக இருக்கட்டும்” என்றான்.
45எனவே, யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார்.
46யாக்கோபு தம் உறவினரை நோக்கி, “கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி, அக்குவியல் அருகே உணவருந்தினர்.
47அதற்கு லாபான் ‘எகர்சகதுத்தா’* என்றும் யாக்கோபு ‘கலயேது’† என்றும் பெயரிட்டனர்.
48பின்னர், லாபான், “இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக” என்றான். ஆகவே, அதற்கு அவன் ‘கலயேது’ என்று பெயரிட்டான்.
49மீண்டும் அவன், “நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண் காணிப்பாராக!” என்று சொல்லி அதற்கு ‘மிஸ்பா’* என்றும் பெயரிட்டான்.
50மேலும், அவன், “நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ, அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ, நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும், உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்” என்றான்.
51மீண்டும் லாபான் யாக்கோபை நோக்கி, “இதோ இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் பாரும். இவற்றை எனக்கும் உமக்கும் இடையே நிறுத்தி வைத்துள்ளேன்.
52நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று; இந்த நினைவுத் தூண் சான்று.
53ஆபிரகாமின் கடவுள், நாகோரின் கடவுள், அவர்களின் தந்தையின் கடவுள், நம்மிடையே நீதி வழங்குவாராக” என்றான். பின்னர், யாக்கோபு ஈசாக்கின் அச்சம் என்ற தம் தந்தையின் கடவுள் பெயரால் ஆணையிட்டு வாக்களித்தார்.
54பின்பு, அவர் மலையின் மேல் பலி செலுத்தி உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார். அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.

யாக்கோபு ஏசாவைச் சந்திக்கத் தயார்செய்தல்

55அதிகாலையில் லாபான் எழுந்து, தன் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினான். பின்னர், அவன் அவர்களை விட்டுப்பிரிந்து தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.

31:13 தொநூ 28:18-32.
31:47 ‘எகர்சகதுத்தா’வுக்கு அரமேயத்தில் ‘சாட்சிக் குவியல்’ என்பது பொருள். ‘கலயேது’க்கு எபிரேயத்தில், ‘சாட்சிக் குவியல்’ என்பது பொருள். 31:49 எபிரேயத்தில், ‘கண்காணித்தல்’ என்பது பொருள்.